Tuesday, May 18, 2010

அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?

நியாயமான ஒரு கேள்வி

"ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம்
வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" –

நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா.

நானும் விவரிக்க ஆரம்பிதேன்.

"வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும்.
அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல
இருந்தே செய்யணும்.
இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய
தயாரா இருக்கான்."

"அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்".

"இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank,
இல்ல எதாவது கம்பெனி, "நான் செலவு செய்ய தயாரா இருக்கேன்.
எனக்கு இத செய்து கொடுங்க கேப்பாங்க.
இவங்கள நாங்க "Client"னு சொல்லுவோம்.

"சரி"

இந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க
பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு "Sales Consultants, Pre-Sales Consultants....".

இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க.

காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்?

ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா?

அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், "முடியும்"னு பதில் சொல்றது இவங்க வேலை.

"இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க"?

"MBA, MSனு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க."

"முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு
எதுக்கு MBA படிக்கணும்?" –

அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது.

"சரி இவங்க போய் பேசின உடனே client project கொடுத்துடுவானா?"

"அது எப்படி? இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிளையும்
இருப்பாங்க. 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள
முடிச்சு தரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க.
இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு
ப்ராஜெக்ட் கிடைக்கும்"

"500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50
நாள்ல எப்படி முடிக்க முடியும்? ராத்திரி பகலா வேலை பார்த்தாலும்
முடிக்க முடியாதே?"

"இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க
புரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான்.

ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும்
தெரியாது, என்ன செய்யனும்னு நமக்கும் தெரியாது.
இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒன்ன நாங்க deliver பண்ணுவோம்.
அத பாத்துட்டு "ஐய்யோ நாங்க கேட்டது இதுல்ல,
எங்களுக்கு இது வேணும், அது வேணும்னு" புலம்ப ஆரம்பிப்பான்.

"அப்புறம்?" - அப்பா ஆர்வமானார்.

"இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே
"இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்"னு சொல்லுவோம்.

"CR-னா?"

"Change Request. இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க
வேலை பார்த்துட்டோம்.
இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்"னு
சொல்லுவோம்.
இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்."

அப்பாவின் முகத்தில் லேசான பயம் தெரிந்தது.

"இதுக்கு அவன் ஒத்துபானா?"

"ஒத்துகிட்டு தான் ஆகணும்.

முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வர முடியுமா?"

"சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?"

"முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம்.
இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு.
இவரது தான் பெரிய தலை.
ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு."

"அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம்
தெரியும்னு சொல்லு."

"அதான் கிடையாது.

இவருக்கு நாங்க பண்ற எதுவும்யே தெரியாது."

"அப்போ இவருக்கு என்னதான் வேலை?" –

அப்பா குழம்பினார்.

"நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போ எவன் குழி பறிப்பானு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன்
ஆகுறது தான் இவரு வேலை."

"பாவம்பா"

"ஆனா இவரு ரொம்ப நல்லவரு.
எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்."

"எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?"

"ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு.
நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை
எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை."

"நான் உன்னோட அம்மா கிட்ட பண்றத மாதிரி?!"

"இவருக்கு கீழ டெக் லீட், மோடுல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு
நிறைய அடி பொடிங்க இருப்பாங்க."

"இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா
வேலை ஈஸியா முடிஞ்சிடுமே?"

"வேலை செஞ்சா தானே?
நான் கடைசியா சொன்னேன் பாருங்க...
டெவலப்பர், டெஸ்டர்னு, அவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க. அதுலையும் இந்த டெவலப்பர்,வேலைக்கு சேரும் போதே "இந்த குடும்பத்தோட மானம், மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு"
சொல்லி, நெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி
தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க."

"அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே?
அவங்களுக்கு என்னப்பா வேலை?"

"இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது
இவனோட வேலை.

புடிக்காத மருமக கை பட்டா குத்தம்,
கால் பட்டா குத்தம் இங்குறது மாதிரி."

"ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா?
புதுசா தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா.
சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள?"

"அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா,
அந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு
இருக்கும். நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை
செய்துக்கலாம்னு சொல்லுவாங்க"

"கிளையன்ட் சும்மாவா விடுவான்?

ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்?"

"கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டிமுக்குள்ளையே
காலை வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார ஆரம்பிப்போம்."

"எப்படி?"

"நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு.
அன்னைக்கு டீம் மீட்டிங்ல வச்சி நீ இருமின,
உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிகலை."
இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம்.
அவனும் சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சு,
இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்".

"சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய
கழுவிட்டு வந்துடுவீங்க அப்படித்தான?"

"அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம
தான் இருக்கணும்."

"அப்புறம்?"

"ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான
ஒன்ன பண்ணி இருக்குறமாதிரியும், அவனால அத புரிஞ்சிக்க
கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்."

"அப்புறம்?"

"அவனே பயந்து போய்,
"எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்-ல ஒரு ஒன்னு, ரெண்டு
பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு"

புது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க."
இதுக்கு பேரு "Maintenance and Support".
இந்த வேலை வருஷ கணக்கா போகும்.
"ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு
கூட்டிட்டு வர்றது மாதிரி.

தாலி கட்டினா மட்டும் போதாது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு" இப்போ தான் கிளைன்டுக்கு
புரிய ஆரம்பிக்கும்.

"எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுப்பா."

Sunday, May 9, 2010

என் முதல் விமான பயணம்

முதன்முதலில் எதை செய்தாலும் அது ஒரு புதிய அனுபவம்தான்.
நான் முதல் முதலில் விமானத்தில் செல்ல போகிறேன் என்று தெரிந்தவுடன் என் மனம் ஆகாயத்தில் பறந்தது. சின்ன வயதில் இருந்து அண்ணார்ந்து பார்த்ததில் அமர்ந்து செல்ல போகிறோம் எனும் போது மனம் பறக்காதா என்ன? அதுவும் ஓசியில் ஏசி பயணம். அதிகாலை சீக்கிரம் எழுந்து ரெடி ஆகி எனது passion பிளஸ் இல் விமான நிலைய வாயிலுக்கு சென்று பார்க் செய்து மணி பார்த்தால், விமானம் புறப்பட ஒண்ணரை மணி நேரம் இருந்தது. சரி டொமெஸ்டிக் விமானம் தானே பத்து நிமிடத்தில் சென்று விடலாம் என்று மெதுவாக சென்றேன். முதலில் போர்டிங் பாஸ் வாங்க வேண்டும் என்று சொன்னார்கள். வாங்கிவிட்டு உள்ளே சென்றால், சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் தேவலாம் போலிருந்தது. அதை விட மூன்று மடங்கு பெரிய வரிசை. ஆனா வேகமாய் நகர்ந்து கொண்டிருந்தது ஆறுதல் அளித்தது.

அரை மணி நேரம் ஊர்ந்த வரிசையில் இப்பொழுது தான் செக்யூரிட்டி செக்கிங்கை அடைந்தேன். என் கைப்பையை scanner உள்ளே அனுப்பி விட்டு ஒருவர் மெட்டல் detector இல் செக் பண்ண ஆரம்பித்தார். என் பாக்கெட்டில் இருந்த purse , சாவிக்கொத்து மற்றும் கைக்குட்டை முதலானவற்றை கூட வெளியில் எடுத்து செக் பண்ணினார். இதற்கே இருபது நிமிடங்கள் ஆகி விட்டது. அங்கு இருந்த எல்லா கவுன்டரிலும் பெண்கள் தான். அட!! பெண் போலீஸ் கூட விமான பணிப்பெண் போல மேக்கப் போட்டிருந்தாங்கனா பாத்துக்கங்க. சரி கடைசியாக விமானத்தில் ஏற போகிறோம் என்று நினைத்தால் மறுபடியும் ஒரு வரிசை. ச்சே!! இதுக்கு நான் ட்ரெயின் ல போயிருக்கலாம்னு தோணிருச்சு. ஆனா அங்க ஒண்ணும் இல்ல, போர்டிங் பாஸ் செக்கிங் மட்டும் தான். செக்கிங் முடிஞ்சு ஒரு பேருந்தில் எல்லாரையும் ஏற்றி கொண்டு விமானம் நிற்கும் இடத்திற்கு கூட்டி சென்றார்கள்.

நான் கற்பனையில் நினைத்ததை விட மிகவும் சிறிய விமானம். உள்ளே போகும் போதே விமான பணிப்பெண்கள் காலை வணக்கம் சொன்னார்கள். அந்த நிமிடம் முதல் விமானம் தரை இறங்கும் வரை அவர்களின் புன்சிரிப்பு ஒரு மில்லி மீட்டர் கூடவோ குறையவோ இல்ல. நல்ல பயிற்சி!!. மைதா மாவு நிறம், மித மிஞ்சிய மேக்கப், ரெடிமேட் புன்சிரிப்பு. ஆனா அழகா இருந்தாங்க. பருவத்துல பன்னி குட்டி கூட அழகா தெரியும்னு சும்மாவா சொன்னாங்க? ம்ம். விமானத்தின் உள்ளே பார்ப்பதற்கு KPN பேருந்து போலவே இருந்தது. கொஞ்சம் கூட வித்தியாசம் கண்டு பிடிக்க முடியாது. ஐந்து நிமிடத்தில் விமானம் கிளம்ப ஆரம்பித்தது. நான் எதிர்பார்த்த ஜன்னல் ஓர இருக்கையில் ஒருவர் அமர்ந்து விட ஏமாற்றத்துடன் பக்கத்தில் அமர்ந்தேன். சீட் பெல்ட்டை அணிய த்ரிஷா மாதிரியெல்லாம் கஷ்டப்படலை, அவங்களே டெமோ காமிக்கிறாங்க. :)

ஓடுகளத்தில் மெதுவாக ஓடிய விமானம் திடீரென வேகம் பிடித்தது. மெதுவாக மேலே செல்ல செல்ல காதினுள் கொய்ய்ய் என்று ஒரு சத்தம் மட்டும் தான் கேட்டது. உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாதுனு சொல்லுவாங்க ஆனா இந்த இயந்திர பறவை உயரே போக போக ஊர் கட்டிடங்களெல்லாம் குருவி மாதிரி தெரிய ஆரம்பித்தது. ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு அப்புறம் வெறும் மேகம் மட்டும் தான் தெரிந்தது. எனக்கு அருகில் இருந்தவர் விமானத்தில் ஏறியதில் இருந்து தூங்கி கொண்டிருந்தான், சோம்பேறி. சிறிது நேரத்திற்கு அப்புறம் ஏதோ வரட்டி மாதிரி ஒன்றை சாப்பிட தந்தார்கள். ஆனா வரட்டியை விட பெரிய சைஸ். அதை சாப்பிட்டு முடிக்கும் முன்னரே பெங்களூர் வந்து விட்டது. ;)

எந்த ஊர் பிடிக்காது என்று நினைத்தேனோ அது இன்று மிகவும் அழகாத் தோன்றியது. பச்சை பசேலென புல்வெளி, கண்ணாடி மாளிகை போன்ற விமான நிலையம், ஆங்காங்கே சிறிய வகை விமானங்கள். விமான நிலையத்தை விட்டு வெளியில் வந்தால், திரைப்படங்களில் காண்பது போல் என்னுடைய பெயர்ப் பலகையை வைத்துக்கொண்டு டாக்ஸி டிரைவர் நின்று கொண்டிருந்தார். சீனு உனக்கெல்லாம் ஒரு நேரம்டா என்று என் தோளை மனதிலேயே தட்டிக் கொண்டே அவர் அருகில் சென்று கையை ஆட்டினேன். அவர் புரிந்து கொண்டு என்னை கூட்டி சென்றார். காரும் ஏசி முடியலே!!.

விமான நிலையத்தில் இருந்து நான் செல்ல வேண்டிய இடம் 50 கிலோமீட்டர், கிட்ட தட்ட ஒண்ணரை மணி நேர பயணம். ஆனா நான் சென்னையில் இருந்து பெங்களூர் சென்றது ஒரு மணி நேரம் கூட இருக்காது. ம்ம் என்ன செய்ய பெங்களூர் டிராபிக் அப்படி. திரும்பி வரும்போது இரண்டு மணி நேரம் முன்னதாகவே வந்து விட்டேன். ஆனால் விமான நிலையத்தில் அந்த அளவு கூட்டம் இல்லை. பதினைந்து நிமிடத்தில் கேட்டுக்கு வந்துட்டேன். ட்ரெயின் மாதிரியே விமானமும் லேட். அந்த நேரத்தில் அங்கிருந்த 12 கேட்டையும் சுத்தி பாத்துட்டேன். சிறிது நேரத்தில் விமானத்தில் ஏறி அமர்ந்தேன். லேசர் லைட் மாதிரி ஓடுகளத்தில் உள்ள விளக்குகள் பின்னோக்கி செல்ல அதுவே ஒரு அழகு தான். விமான பணிப்பெண்ணின் இருக்கை அருகிலேயே என் இருக்கை. நான் அவரிடம் பேசிக்கொண்டே வர, அதே புன்சிரிப்பு மாறாத பேச்சு. விமானம் சென்னையை நெருங்கும் போது தரை முழுவதும் நட்சத்திரம் கொட்டியது போல, மின்மினி பூச்சி கூட்டங்கள் போல அவ்வளவு அழகாக விளக்குகள்.

என்ன இருந்தாலும் பகல் நேர விமான பயணம் போல ஒரு இனிமையான பயணம் வராது.