Sunday, May 9, 2010

என் முதல் விமான பயணம்

முதன்முதலில் எதை செய்தாலும் அது ஒரு புதிய அனுபவம்தான்.
நான் முதல் முதலில் விமானத்தில் செல்ல போகிறேன் என்று தெரிந்தவுடன் என் மனம் ஆகாயத்தில் பறந்தது. சின்ன வயதில் இருந்து அண்ணார்ந்து பார்த்ததில் அமர்ந்து செல்ல போகிறோம் எனும் போது மனம் பறக்காதா என்ன? அதுவும் ஓசியில் ஏசி பயணம். அதிகாலை சீக்கிரம் எழுந்து ரெடி ஆகி எனது passion பிளஸ் இல் விமான நிலைய வாயிலுக்கு சென்று பார்க் செய்து மணி பார்த்தால், விமானம் புறப்பட ஒண்ணரை மணி நேரம் இருந்தது. சரி டொமெஸ்டிக் விமானம் தானே பத்து நிமிடத்தில் சென்று விடலாம் என்று மெதுவாக சென்றேன். முதலில் போர்டிங் பாஸ் வாங்க வேண்டும் என்று சொன்னார்கள். வாங்கிவிட்டு உள்ளே சென்றால், சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் தேவலாம் போலிருந்தது. அதை விட மூன்று மடங்கு பெரிய வரிசை. ஆனா வேகமாய் நகர்ந்து கொண்டிருந்தது ஆறுதல் அளித்தது.

அரை மணி நேரம் ஊர்ந்த வரிசையில் இப்பொழுது தான் செக்யூரிட்டி செக்கிங்கை அடைந்தேன். என் கைப்பையை scanner உள்ளே அனுப்பி விட்டு ஒருவர் மெட்டல் detector இல் செக் பண்ண ஆரம்பித்தார். என் பாக்கெட்டில் இருந்த purse , சாவிக்கொத்து மற்றும் கைக்குட்டை முதலானவற்றை கூட வெளியில் எடுத்து செக் பண்ணினார். இதற்கே இருபது நிமிடங்கள் ஆகி விட்டது. அங்கு இருந்த எல்லா கவுன்டரிலும் பெண்கள் தான். அட!! பெண் போலீஸ் கூட விமான பணிப்பெண் போல மேக்கப் போட்டிருந்தாங்கனா பாத்துக்கங்க. சரி கடைசியாக விமானத்தில் ஏற போகிறோம் என்று நினைத்தால் மறுபடியும் ஒரு வரிசை. ச்சே!! இதுக்கு நான் ட்ரெயின் ல போயிருக்கலாம்னு தோணிருச்சு. ஆனா அங்க ஒண்ணும் இல்ல, போர்டிங் பாஸ் செக்கிங் மட்டும் தான். செக்கிங் முடிஞ்சு ஒரு பேருந்தில் எல்லாரையும் ஏற்றி கொண்டு விமானம் நிற்கும் இடத்திற்கு கூட்டி சென்றார்கள்.

நான் கற்பனையில் நினைத்ததை விட மிகவும் சிறிய விமானம். உள்ளே போகும் போதே விமான பணிப்பெண்கள் காலை வணக்கம் சொன்னார்கள். அந்த நிமிடம் முதல் விமானம் தரை இறங்கும் வரை அவர்களின் புன்சிரிப்பு ஒரு மில்லி மீட்டர் கூடவோ குறையவோ இல்ல. நல்ல பயிற்சி!!. மைதா மாவு நிறம், மித மிஞ்சிய மேக்கப், ரெடிமேட் புன்சிரிப்பு. ஆனா அழகா இருந்தாங்க. பருவத்துல பன்னி குட்டி கூட அழகா தெரியும்னு சும்மாவா சொன்னாங்க? ம்ம். விமானத்தின் உள்ளே பார்ப்பதற்கு KPN பேருந்து போலவே இருந்தது. கொஞ்சம் கூட வித்தியாசம் கண்டு பிடிக்க முடியாது. ஐந்து நிமிடத்தில் விமானம் கிளம்ப ஆரம்பித்தது. நான் எதிர்பார்த்த ஜன்னல் ஓர இருக்கையில் ஒருவர் அமர்ந்து விட ஏமாற்றத்துடன் பக்கத்தில் அமர்ந்தேன். சீட் பெல்ட்டை அணிய த்ரிஷா மாதிரியெல்லாம் கஷ்டப்படலை, அவங்களே டெமோ காமிக்கிறாங்க. :)

ஓடுகளத்தில் மெதுவாக ஓடிய விமானம் திடீரென வேகம் பிடித்தது. மெதுவாக மேலே செல்ல செல்ல காதினுள் கொய்ய்ய் என்று ஒரு சத்தம் மட்டும் தான் கேட்டது. உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாதுனு சொல்லுவாங்க ஆனா இந்த இயந்திர பறவை உயரே போக போக ஊர் கட்டிடங்களெல்லாம் குருவி மாதிரி தெரிய ஆரம்பித்தது. ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு அப்புறம் வெறும் மேகம் மட்டும் தான் தெரிந்தது. எனக்கு அருகில் இருந்தவர் விமானத்தில் ஏறியதில் இருந்து தூங்கி கொண்டிருந்தான், சோம்பேறி. சிறிது நேரத்திற்கு அப்புறம் ஏதோ வரட்டி மாதிரி ஒன்றை சாப்பிட தந்தார்கள். ஆனா வரட்டியை விட பெரிய சைஸ். அதை சாப்பிட்டு முடிக்கும் முன்னரே பெங்களூர் வந்து விட்டது. ;)

எந்த ஊர் பிடிக்காது என்று நினைத்தேனோ அது இன்று மிகவும் அழகாத் தோன்றியது. பச்சை பசேலென புல்வெளி, கண்ணாடி மாளிகை போன்ற விமான நிலையம், ஆங்காங்கே சிறிய வகை விமானங்கள். விமான நிலையத்தை விட்டு வெளியில் வந்தால், திரைப்படங்களில் காண்பது போல் என்னுடைய பெயர்ப் பலகையை வைத்துக்கொண்டு டாக்ஸி டிரைவர் நின்று கொண்டிருந்தார். சீனு உனக்கெல்லாம் ஒரு நேரம்டா என்று என் தோளை மனதிலேயே தட்டிக் கொண்டே அவர் அருகில் சென்று கையை ஆட்டினேன். அவர் புரிந்து கொண்டு என்னை கூட்டி சென்றார். காரும் ஏசி முடியலே!!.

விமான நிலையத்தில் இருந்து நான் செல்ல வேண்டிய இடம் 50 கிலோமீட்டர், கிட்ட தட்ட ஒண்ணரை மணி நேர பயணம். ஆனா நான் சென்னையில் இருந்து பெங்களூர் சென்றது ஒரு மணி நேரம் கூட இருக்காது. ம்ம் என்ன செய்ய பெங்களூர் டிராபிக் அப்படி. திரும்பி வரும்போது இரண்டு மணி நேரம் முன்னதாகவே வந்து விட்டேன். ஆனால் விமான நிலையத்தில் அந்த அளவு கூட்டம் இல்லை. பதினைந்து நிமிடத்தில் கேட்டுக்கு வந்துட்டேன். ட்ரெயின் மாதிரியே விமானமும் லேட். அந்த நேரத்தில் அங்கிருந்த 12 கேட்டையும் சுத்தி பாத்துட்டேன். சிறிது நேரத்தில் விமானத்தில் ஏறி அமர்ந்தேன். லேசர் லைட் மாதிரி ஓடுகளத்தில் உள்ள விளக்குகள் பின்னோக்கி செல்ல அதுவே ஒரு அழகு தான். விமான பணிப்பெண்ணின் இருக்கை அருகிலேயே என் இருக்கை. நான் அவரிடம் பேசிக்கொண்டே வர, அதே புன்சிரிப்பு மாறாத பேச்சு. விமானம் சென்னையை நெருங்கும் போது தரை முழுவதும் நட்சத்திரம் கொட்டியது போல, மின்மினி பூச்சி கூட்டங்கள் போல அவ்வளவு அழகாக விளக்குகள்.

என்ன இருந்தாலும் பகல் நேர விமான பயணம் போல ஒரு இனிமையான பயணம் வராது.

1 comment: