Thursday, September 29, 2011

மாவும்-சாவும்-யாவும் நீயே!

அவள் பெயர் லாவண்யா
‘லாவு’ என செல்லம் கொஞ்சி கூப்பிடுவது
வழக்கம்

காதல் முதன்மையானது
முதல் காதல் இனிமையானது

அவளை ஹிந்தி டீச்சர் அடித்த நாள்
என் காதலுக்கு பிறந்த நாள்

பக்கத்துக்கு வீட்டு பெண்ணை காதலிப்பது பழசு
காதலிக்கும் பெண்ணின்,
வீட்டுக்கு பக்கத்தில் குடி போவது?

அவள் அண்ணன் ரஸ்லிங் பிரியன்
நான் ராமராஜன் சண்டைக்கே சேனலை
மாற்றிவிடுவேன்,இருந்தும்
சிவப்பு ஜட்டிக்காரன்,பரங்கிக்காய் தலையன்
முள்ளம் பன்றியன் என ரஸ்லர்களுக்கு
பொத்தாம் புதுவில் பெயர் வைத்து கலகலத்தோம்

அவனோடு சேர்ந்து அண்டர்டேகர் டேட்டூவை
அடிவயிற்றில் குத்திக் கொண்டேன்
அர்னால்டு போட்டோவை பூஜை அலமாரியில்
மாட்டி வைத்தேன்

காலம் கனிந்தது, அவன்
தங்கையின் மேலான காதலும் கசிந்தது

கடவாய்ப் பற்கள் ரத்தம் கொப்பளித்து
கையோடு வரவும் தான் புரிந்தது
அவனுக்கு ரஸ்லிங் பிடிப்பது மட்டுமல்ல
தெரியவும் செய்யுமென ?!?!?!?

‘இன்று போய் நாளை வா’ பாதிப்பில்
அவள் வீட்டு மண்ணெண்ணெய்காக
நியாய விலைக் கடையில்
அநியாயத்திற்கு காத்துக்கிடந்தேன்
மாவு மில்லில்,
என் தன்மானமும் சேர்ந்து அரைபட்டது

ஆயுத பூஜை நாளொன்றில்
கரும்புக் கடையில்
இரண்டு அம்மாக்களும் சந்திக்க நேர
“பையன் ரொம்ப சமத்து,
எங்கள் வீட்டின் எல்லா வேலையும்
இழுத்துப் போட்டு செய்கிறான்” என்று சொன்னது தான் பாக்கி

‘அடுத்த ஏழு நாட்கள்’ எங்கள் வீட்டில்,
எனக்கு ஆயுத பூஜை
வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது ?!?!?!?

சமூக அறிவியலில்
எல்லை மதிப்பெண்ணை தாண்ட மாட்டாள்,
அதில் கெட்டிக்காரனான நான்
அவளுக்கு டியூசன் வாத்தியாராகி விட்டேன்

அவள் பாடத்தை கவனித்தாள்
நான் அவளை மட்டுமே கவனித்தேன்

விளைவு?
எனக்கு ,சனிக்கிழமையும் கிடையாது,
சக்திமானும் கிடையாது
சமூக அறிவியலில் தேர்ச்சி பெறாதவர்க்கான
சிறப்பு வகுப்பு மட்டுமே?!?!?!?

அடுத்து வந்த தேர்வில் நான் எழுதிய பதில்கள்
உலகப் பிரசித்தம்

கோதுமை அதிகம் விளையும் இடம் எது ?
மசக்காளிபாளையம் ரேசன் கடை
காந்தியை கொன்றது யாரென்றதற்கு,
அண்டர்டேகர் தான் என எழுதிவைத்தேன்

உண்மைதானே !!
எனக்கு தெரிந்த சமூகம்,உன் வீடு !
எனக்கு தெரிந்த அறிவு, அது நீ !

அவள் வீட்டுக் கிழவி மரணித்துப் போக
தந்தி முதல்,பந்தி வரை இழுத்துப் போட்டுச் செய்தேன்
உன் பிரியத்திற்குரிய பாட்டியின் இழப்பை தாளாமல்
அழுது வடிந்த கன்னங்களோடு பந்தியில் வந்தமர்ந்தாய்

“மெதுவடை தீர்ந்து விட்டது,
அதான் உனக்கு வைக்கல,
இதுக்கு போய்யா அழுவது?” - என்றேன்
கிழவியின் பாடையோடு
என் காதலும் எடுத்துச் செல்லப்பட்டது !!

(உன் வீட்டின் மாவும், சாவும், ‘லாவு’ம், யாவும் நீயே)

No comments:

Post a Comment